Thursday, June 18, 2020

தினம் ஒரு சாயி வெண்பா: விநாயகர் காப்புச் செய்யுள்


பெற்றோர் பெருமை பெரிதிவ் வுலகிலெனச்
சுற்றிவந்து காண்பித்த தூயவனே - அற்புதமாய்
வெண்பாவிற் சாயி விரிபுகழை நான்கூற
கண்பார்க்க வேண்டும் கனிந்து.

இந்த உலகினைவிடப் பெற்றோர் மிகப்பெருமை உடையோர் என்பதை அவர்களைச் சுற்றி வலம்வந்து நிரூபித்த தூயவனான விநாயகனே! பகவான் ஸ்ரீ சத்திய சாயியின் எல்லையற்று விரிந்த புகழைத் தினமும் ஒரு வெண்பா வழியே நான் சாற்றிட நீ கனிவோடு கடைக்கணிக்க வேண்டுமையா!

Tuesday, May 5, 2020

ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!

ஓம் ஸ்ரீ சாயிராம்



அவர் பெற்றார் இவர் பெற்றார்
  அவையெல்லாம் குழந்தைகளே!
இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா
  எனும்பெயரைக் கொண்டபெருந்
தவள்பெற்றாள் தான்பெற்றாள்
  தரணியெலாம் உய்ந்திடவே
சிவம்பெற்றாள் சக்தியினைச்
  சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்!

நோயுற்றார் பிணிதீர்ந்தார்
  நோற்பாரோ தவம்தீர்ந்தார்
போயுற்றார் புட்டபர்த்திப்
  பொன்னகரை, ஈஸ்வரம்மா
தாயுற்ற தவப்புதல்வன்
  தன்னிகரில் லாத்தலைவன்
சாயீசன் சன்னிதியில்
  சன்மமிலா வாழ்வுற்றாரே!

நீலவொளிச் சிறுபந்தாய்
  நிமலமகள் கருப்புகுந்தான்
ஆலமதை அருந்தியவன்
  அவள்மடியில் அமுதருந்த!
சீலமிகும் ஈஸ்வரம்மா
  செய்ததவம் எவர்செய்தார்
பாலகனாய்ப் பரமனையே
  பரிவுடனே வளர்த்தெடுக்க!

நாமகிரி நல்வயிற்றில்
 “நாதனவன் வருவன்”என
ஆமந்த அவதூதர்
  அறிவித்த காரணத்தால்
“நாமமினி ஈஸ்வரம்மா!”
  நவின்றாராம் கொண்டமரும்;
பூமகளின் புகழ்மகனே
  போற்றுகநின் திருநாமம்!

போற்றுகநின் பூம்பாதம்
  போற்றுகநின் பெருங்கருணை
போற்றுகநின் ஞானமொழி
  போற்றுநின் பொற்கரங்கள்
போற்றுகநின் மெய்யருளால்
  பொலிவுற்ற வேதவழி
போற்றுகவே ஈஸ்வரம்மா
  பொற்கருவில் வந்தஇறை!

மதுரபாரதி
06-05-202

Friday, April 24, 2020

ஆராதனா பஞ்சகம்


ஆரமுதே அருட்புனலே அன்பர் தாழும்
பேரழகுப் பெட்டகமே பேணிக் காக்கும்
கார்முகிலே கண்மணியே கங்கை போல
வார்கருணை மாதவனே சாயித் தேவே!

நடந்தாலும் நடனம்போல் நடப்பாய் நன்கு
சுடர்ந்தாலும் சுடர்விழியால் சுடர்வாய் நன்கு
இடர்தீர்க்கும் இருகையால் அருள்வாய் நன்கு
அடர்சிகையின் அச்சுதனே அன்பின் தேவே!

கொண்டமரின் குலக்கொழுந்தே குலவை பாடும்
வண்டமரும் வண்ணமலர் சூடும் மார்பா!
எண்டிசையோர் ஏற்றமுற இன்சொல் கூறும்
பண்டிதர்க்கும் பண்டிதனே பர்த்தித் தேவே!

வீசுகிற அருட்பார்வை மின்னல் வெட்டு
கூசுகிற ஒளிநுதலோ நிலவின் தட்டு
பேசுகிற அமுதமொழி பொருநைத் தென்றல்
பூசுரரும் புவிநரரும் போற்றும் தேவே!

உன்னுடலை நீமறைத்துக் கொண்டா லென்ன
உன்னுகிற ஒருகணத்தில் உள்ளத் துள்ளே
புன்னகையும் பொன்னுடலும் கொண்டே வந்து
என்னவெனக் கேட்டிடுவாய் எந்தன் சாயீ!

Monday, December 16, 2019

ஸ்ரீ சத்திய சாயி நவரத்தின மாலை




விநாயகர் காப்பு

 வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட 
 தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப் 
 பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே 
 கண்பார் கணபதிநீ காத்து. 

பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன் கடைப்பிடிப்பது குறைந்து, எங்கும் எதிலும் சுயநலமே வேரூன்றியவிட்ட இந்தக் காலத்தில் (நம்மை உய்விக்கும் பொருட்டாக) பூமியில் வந்துதித்த மாதவனாகிய ஸ்ரீ சத்திய சாயிக்கு, பண்போடு ஒரு நவமணி மாலையைக் கவிதைகளால் சாற்றுதற்கு, விநாயகப் பெருமானே, நீ நினது பார்வையினாற் காக்க வேண்டும்.

1. வைரம்

 ஒளிவீசும் விழிவைரம் உவகை பொங்கக் 
 களிவீசும் நகைவைரம் பொதிகைக் குன்றின் 
 வளிவீசும் நடைவைரம் சாயீ  சா, நீ 
 அளிவீசும் அன்பென்னும் வைரக் குன்றம்! 

பொருள்:
சத்ய சாயீசா! உன் கண்கள் ஒளி வீசுகின்ற வைரங்கள்; மகிழ்ச்சி பொங்கக் களிப்பை அள்ளி வீசுகின்ற நின் சிரிப்பு வைரம்; பொதிகை மலையிலிருந்து கிளம்பி வருகின்ற தென்றலைப் போல நீ நடப்பது வைரம்; ஏன், நீயே கருணையைப் பொழிகின்ற அன்பாகிய வைரத்தாலான மலைதான்!

2. வைடூரியம்

குன்றாத குணக்குன்றம் கோடைக் கொண்டல்
மன்றாடும் சிவசக்தி மண்ணில் வந்த
பொன்றாத வைடூர்யம்! சத்ய சாயீ
கன்றாத கருணைகொள் கலியின் தெய்வம்!

பொருள்:
சத்ய சாயி பகவானே! நீ ஒருபோதும் குறைவுபடாத பண்புகளின் குன்றம்; கோடைகாலத்தில் குளிர்விக்க வந்த மழைமேகம்; சித்சபையில் சேர்ந்து ஆடுகிற சிவ-சக்தி அவதாரம்; பூமியில் வந்த மங்காத வைடூரியம்; ஒருபோதும் சினமறியாக் கருணையே வடிவான, இந்தக் கலியுகத்துக்கான தெய்வம்.

3. முத்து

தெய்வங்கள் அத்தனையும் ஒன்றாய்ச் சேர்ந்தே
உய்விக்க ஓருருவாய் வந்தே நின்ற
மெய்யுருவே மிளிர்முத்தே சத்ய சாயீ
வையகத்தில் வானகத்தைக் கொண்டு வந்தாய்!

பொருள்:
சத்ய சாயீசா! அனைத்துத் தெய்வங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வடிவில் எம்மை உய்விக்கும் பொருட்டாகப் புவிக்கு வந்த மெய்ஞானப் பொருளே! ஒளிர்கின்ற முத்தே; இந்த பூமிக்கே நீ சொர்க்கத்தைக் கொண்டுவந்துவிட்டாய்.

4. மரகதம்

வரமென்ன பெற்றோம்நாம் வைகுந் தத்தின்
மரகதத்து மாலவனும் மண்ணில் வந்து
கரமுயர்த்தி அபயமென! சத்ய சாயீ
அரவணையில் அறிதுயிலோய்! அன்பர்க் கன்பே!

பொருள்:
சத்ய சாயீசா! வைகுண்ட வாசனாகிய, மரகதப் பச்சை வண்ணம் கொண்ட திருமால் இந்தப் பூவுலகுக்கு வந்து, தனது கையை ‘அஞ்சேல்’ என உயர்த்துவதற்கு நாங்கள் என்ன வரம் பெற்றோமோ! ஆதிசேடன் என்னும் பாம்பணையில் அனைத்தும் அறிந்ததொரு துயிலைக் கொண்டவனே, அன்பர்களுக்கெல்லாம் அன்பாய்ப் பெருகுவோனே.

5. மாணிக்கம்

பேணித்தன் பிள்ளைபோற் காக்கும் அன்னாய்!
மாணிக்கம் போலுடையில் மகிழும் தந்தாய்!
ஆணிப்பொன் போலொளிரும் சத்ய சாயீ,
தோணியென மறுகரையிற் சேர்ப்பாய் நீயே!

பொருள்:
ஸ்ரீ சத்ய சாயீசா! நீ எம்மை அன்னைபோலப் பேணிக் காக்கிறாய். மாணிக்கம் போலச் சிவந்த உடையில் வலம்வரும் தந்தையாகவும் இருக்கிறாய். ஆணிப்பொன் போல ஒளிவீசுகிறாய். பகவானே நீ மறுமைக்கு எம்மை ஒரு தோணியைப் போலக் கொண்டு சேர்ப்பாயாக!

6. பவளம்

சேர்ப்பாய்நீ சேராத இதயம் சேரப் 
பார்ப்பாய்நீ பவளநிற இதழ்ச்சி ரிப்பில்
ஈர்ப்பாய்நீ என்னிறையே சத்ய சாயீ
தேர்ப்பாகா தனஞ்சயனின் உண்மைத் தோழா!

பொருள்:
அர்ஜுனனின் தேர்ப்பாகனாக இருந்தவனே, அவனுடைய உண்மைத் தோழனும் எனது இறைவனுமான சத்ய சாயீ!  சேராத (பகைபூண்ட) இதயங்களையும் ஓர் அருட்பார்வையில் ஒன்று சேர வைத்துவிடுவாய். உன்னுடைய பவளநிற இதழ்களில் உதிர்க்கும் சிரிப்பினால் ஈர்த்துவிடுவாய்.

7. பதுமராகம்

தோழனெனக் கூறிலது நீமட் டுந்தான்
வாழ்க்கையிலும் அப்பாலும் வருவாய் கூட
காழ்பதும ராகக்கல் சத்ய சாயீ
ஏழ்சுரமும் உன்புகழை இசைக்கும் அன்றே!

பொருள்:
ஒளிவீசுகின்ற பதுமராகக் கல் போன்ற சத்ய சாயீ! உண்மையான தோழன் என்று கூறப்போனால் அது நீ மட்டுமே. ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அதனைத் தாண்டியும் நீ ஒருவனே துணை வருவாய். இசையின் ஏழு சுரங்களும் உன் புகழையல்லவோ இசைக்கின்றன!

8. கோமேதகம்

ஏகாந்த மௌனத்தில் இருக்கும் போது
நீகாந்தக் குரலாலே வார்த்தை சொல்வாய்
ஆகா!கோ மேதகமாகத் தகத கப்பாய்!
மீகாமா! கலங்கரையின் விளக்கம் போல்வாய்!

பொருள்:
(சத்ய சாயீசா!) யாருமில்லாத் தனிமையில் முழு அமைதியில் ஓர் அன்பர் இருந்தால் அவரிடம் நீ உன்னுடைய காந்தம்போல வசீகரிக்கும் குரலால் பேசுவாய்! ஆகா! நீ கோமேதகக் கல்லைப் போல தகதகவென்று தோற்றமளிப்பாய். நீயே எம் வாழ்வாகிய மரக்கலத்துக்கு மாலுமியாகவும், (மாயையாகிய அந்தகாரத்தில்) அதற்குச் சரியாகத் திசைகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் இருக்கின்றாய்!

9. நீலம்

வாயுண்ட ஆலத்தால் தொண்டை நீலம்
மாயன்நீ பலநிறங்கள் காட்டிப் போனாய்
மேயநிறம் கொண்டதெலாம் சத்ய சாயீ
தூயவனே, மதுரகவி சொல்லல் ஆமோ!

பொருள்:
ஆலகால விடத்தை உண்ட காரணத்தால் உனது தொண்டை நீலமானது. ஆனால் மாயனாகிய நீ இந்த அவதாரத்தில் நீலம், பச்சை, மஞ்சள், பொன்னிறம் என்று பலவகை நிறங்களில் மிளிர்ந்ததுண்டு என்றாலும் முற்றிலும் தூயவன் நீ. அப்படியிருக்க நீ மேற்கொண்ட நிறங்களை இந்த மதுரபாரதியாகிய கவிஞன் சொல்ல வல்லவனோ?

10. பலன் குறித்த பாடல் (பலச்ருதி)

ஆமாறு வேண்டுமெனில் ஐயா நின்றன்
தேமாரி நவரத்ன மாலை நித்தம்
பூமாரி போற்சொல்ல இங்கும் அங்கும்
தாமாகத் தேடிவரும் அழியா நன்மை!

பொருள்:
எவருக்கும் ஆக்கம் காணும் உபாயம் வேண்டுமென்றால், தினந்தோறும், தேன்மழை போல இனிக்கும் இந்த நவரத்தின மாலையை, பூச்சொரிந்தது போல ஓதினால், இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் ஆகத்தக்க அழிவற்ற நன்மைகள் தாமாகவே தேடி அவருக்கு வரும்.

Saturday, November 16, 2019

போற்றி பஞ்சகம்!



பாம்பணையும் பாற்கடலும் போதா வென்றோ
பாம்பணையும் புற்றுமிகும் பர்த்தி வந்தாய்!
தேம்பிழியும் திருக்குரலால் தினமும் பேசி
சாம்பலினால் நோய்தீர்க்கும் சாயீ போற்றி!

பனிமலையும் பொற்சபையும் போதா வென்றோ
இனியநதி இழைந்தோடும் பர்த்தி வந்தாய்!
கனியமுதக் கண்விழியில் கருணை தேக்கி
மனிதரிடை அவதரித்த சாயீ போற்றி!

அறுபடையின் திருவீடு போதா வென்றோ
நறுமலர்கள் நனிசூழும் பர்த்தி வந்தாய்!
குறுநகையும் குதிநடையும் கூற்றந் தன்னைச்
செறுவிழியும் சிகையழகும்! சாயீ போற்றி!

அலைமகள்நின் அன்பரவர் இல்லம் சேர்ந்தாள்
மலைமகள்நின் பாதியுடல் ஆகிச் சேர்ந்தாள்
கலைமகள்நின் அன்பரவர் நாவிற் சேர்ந்தாள்
தலைமகனே தனியொருவ சாயீ போற்றி!

காணுவதும் நின்தோற்றம் கணம்வி டாமல்
பூணுவதும் நின்நாமம் நாவில், நெஞ்சில்
பேணுவதும் நின்னருளே, பிறவாப் பேற்றை
வேணுவதும் நின்னிடமே சாயீ போற்றி!

ஓம் ஸ்ரீ சாயிராம்

Thursday, August 8, 2019

சாயீ தாள் பணிவேன்!



நானே எனதே என்றெண்ணி
   நாதா நின்னை மறந்திட்டே
ஊனே வளர்த்தேன் உலகியலில்
   ஊறிக் கிடந்தேன் எனைமீட்டாய்
வானே மண்ணே வையகமே
   வகையாய்ப் படைத்த மாதவனே
தானே தன்னை அறியும்வகை
   தந்தாய் சாயீ தாள்பணிவேன்!

Sunday, June 30, 2019

அச்சமறு பதிகம் - 7


வேட்கைக் கஞ்சுகிலேன் விதநூறு
பூட்கைக் கஞ்சுகிலேன் பொய்ந்நெறியர்
வாட்கைக் கஞ்சுகிலேன் சாயீசன்
தாட்கைக் கணியான தரத்தினாலே!  

பொருள்

சாயீசனின் திருவடிகளே எனது கைகளுக்கு அணியாகிவிட்ட இயல்பினாலே, நான் என்னை அணுகும் ஆசைகளுக்கு அஞ்சமாட்டேன்; (உலகில் நிலவும்) நூறுவிதமான கொள்கைகளுக்கு அஞ்சமாட்டேன்; பொய்யான நெறிகளைப் பின்பற்றுவோரின் ஆயுதம் தாங்கிய கைகளுக்கும் அஞ்சமாட்டேன்.

சிறப்புப்பொருள்

தாட்கைக்கணியான தரம் - தாள் + கைக்கு + அணியான தரம் - என் கைகளுக்கு சாயீசனின் பாதங்களே அணிகலனாக இருக்கும் நிலை, அதாவது, சாயீசன் பாதங்களையே எப்போதும் என் கைகள் பற்றியிருப்பதால் என்பது பொருள்.
பூட்கை - கொள்கை, கோட்பாடு
வாட்கை - வாள் + கை - ஆயுதம் தாங்கிய கை