Wednesday, January 1, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 12

உய்யும் வழிகாண வாருங்கள்



வயிர நகையாய் வடிவெழில் நங்காய்!
அயராமல் ஆயிரம் காதைகள் சொன்னாய்,
“கயிறா லுரலினில் கட்டுண்டோன் வந்தான்
உயர்பர்த்தி தன்னிலே, உள்ளம் கவர்ந்தான்
உயிரும் அவன்”என் றுரைத்தசொல் போச்சோ!
துயிலும் விலக்கலை! தோழியர் நாம்போய்
புயல்வண்ணன் சாயீசன் பொன்னடி போற்றி
உயல்வழி காண்போம் உயர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-12)

வைரம்போலப் புன்னகைக்கும் அழகிய வடிவையுடைய பெண்ணே! 

“கயிற்றினால் உரலோடு கட்டப்பட்டவன் (கண்ணன்) பூமிக்கு மீண்டும் வந்திருக்கிறான். அவன் உயர்ந்த புட்டபர்த்தியில் அவதரித்திருக்கிறான். என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட அவனே என் உயிரும்கூட” என்றெல்லாம் சளைக்காமல் ஆயிரம் கதைகள் கூறினாயே. அந்தச் சொல்லெல்லாம் போய்விட்டதோ? (அவனுக்காகக்கூட) உறக்கத்தை நீ விலக்கவில்லை. 

தோழியரே வாருங்கள்! நாம் போய், மேக வர்ணம் கொண்ட சாயீசனின் பொன்னடிகளைப் போற்றி, முக்தி அடைவதற்கான வழியைப் பெற்று உயர்வோம் வாருங்கள்!

No comments:

Post a Comment