Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 16

சாயி சொல் கேட்போம்


அன்னாய்! உனதுமகள் ஆதவன் வந்தபின்
இன்னம் உறங்குவ தென்னே! எழுப்புகிலை?
பொன்னகை சோம்பல் புறம்பேசல் பொய்நீக்கி
நன்னடத்தை பூண்டு நலமிலாக் கேளிக்கை
மின்னும் பகட்டு பொறாமை யகற்றியே
தின்னுவ இன்னவென்று தேர்ந்து நுகர்குவோம்
சொன்னமும் அன்னமும் நீரும் வழங்குவோம்
முன்னவன் சாயிசொல் கேட்டேலோ ரெம்பாவாய்!    (பாடல்-16)

(எவ்வளவு கூறியும் தமது தோழி எழுந்திராததைக் கண்டு அவளுடைய அன்னையிடம் புகார் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது).

அம்மா! சூரியனே வந்துவிட்டான் இன்னும் உன் மகள் உறங்கிக் கொண்டிருப்பது எப்படி? நீதான் அவளை எழுப்பமாட்டாயா?

(இந்தப் பாவை நோன்பை நோற்கும் நாங்கள்) பொன்னாலான நகைகளை அணியமாட்டோம்; புறங்கூறுதலும் பொய் பேசுவதும் விலக்குவோம்;

நல்ல நடத்தை பூண்டு ஒழுகுவோம்;

எந்தப் பொழுதுபோக்கு நலத்தைத் தராதோ அதையும், ஆடம்பரத்தையும், பொறாமையையும் நீக்கிவிடுவோம்;

நாம் உண்ணும் பொருள் நல்லதா அல்லவா என்று ஆராய்ந்து பின்னர் உண்ணுவோம்;

தங்கமும், உணவுப்பொருளும், நீரும் தானமாக வழங்குவோம்.

ஆதிமூலமான சாயியின் அருள்மொழிக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் இவற்றைச் செய்கிறோம்!

No comments:

Post a Comment